இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அணி இலக்கணம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பிறிதுமொழிதல்அணியில்......... மட்டும் இடம்பெறும்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) தொடை
ஈ) சந்தம்
[விடை : அ) உவமை]
2. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும்
கூறுவது ---------------- அணி.
அ) ஒற்றுமை
ஆ) வேற்றுமை
இ) சிலேடை
ஈ) இரட்டுற மொழிதல்
[விடை : ஆ) வேற்றுமை]
3. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது. -----------
அணி.
அ) பிறிதுமொழிதல்
ஆ) இரட்டுறமொழிதல்
இ) இயல்பு நவிற்சி
ஈ) உயர்வு நவிற்சி
[விடை : ஆ) இரட்டுறமொழிதல்]
4. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் --------- அணி.
அ) பிறிதுமொழிதல்
ஆ) வேற்றுமை
இ) உவமை
ஈ) சிலேடை
[விடை : ஈ) சிலேடை]
சிறுவினா
1. பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.
விடை
அணி விளக்கம் :
உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல்
அணி எனப்படும்.
எ.கா. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும்
கப்பல் நிலத்தில் ஓடாது என்று உவமையை மட்டும் கூறுகிறது.
இதன் மூலம் ‘ஒவ்வொருவரும்
தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெற முடியும். தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றி
பெறுதல் இயலாது’ என்னும் கருத்து விளக்கப்படுகிறது. எனவே இக்குறட்பாவில்
பிறிதுமொழிதல் அணி இடம் பெற்றுள்ளது.
2. வேற்றுமை அணி என்றால் என்ன?
விடை
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக்
கூறி பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
3. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?
விடை
இரட்டுறமொழிதல் அணியில் ஒரு சொல் அல்லது தொடர்
இருபொருள் தருமாறு அமையும்.
மொழியை ஆள்வோம்!
கேட்க.
தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகனைப் பெரியவர்களிடம் கேட்டு மகிழ்க.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
1. நம்பிக்கையே உயர்வு.
விடை
அவையோர்க்கு வணக்கம்! இன்று நான் நம்பிக்கையே
உயர்வு’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
நம்மைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பது
முக்கியம் அல்ல. நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதுதான் மிகவும் அவசியம். நாம்
அச்சமின்றி நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்யும் போது கிடைப்பதே வெற்றி.
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
இப்பாடல் வரிகள் ஒவ்வொருவர் காதிலும் இசைத்துக்
கொண்டே இருக்க வேண்டும். அது வெற்றிப் பாதையை நமக்குக் காட்டும்.
மண்ணில் விதையை விதைத்தால் அது கட்டாயமாக பூமியைப்
பிளந்து கொண்டு வானத்தைப் பார்த்து வளர்ந்து “நான்
இருக்கிறேன்” என்று காட்டுகிறது. அதேபோல்தான் நாமும் இவ்வுலகில்
பிறந்து விட்டோம். நம்மால் எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதில்
வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரையும் ஒரு லட்சிய மனிதனாகவும் சாதனை மனிதனாகவும்
காட்டுகிறது.
நம் வெற்றிக்கு முதலில் நாம் நம்மீது நம்பிக்கை
கொள்ள வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் முன் வைக்கின்ற ஒவ்வொரு
முயற்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை அடித்தளமாகக் கொள்ள வேண்டும். நம்மால் முடியும்’ என்று தினசரி மனதிற்குச் சொல்லிக் கொண்டே இருக்க
வேண்டும்.
நான் எண்ணிய காரியம் எளிதில் முடியும் என்றும்
என்னை சுற்றியுள்ளவர்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்றும் நம் கண்முன் இவை நடப்பது
போன்ற ஒரு காட்சியை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை நம்மை வெற்றியடையச்
செய்யும்.
ஒவ்வொரு வெற்றிக்குப் பின் நம் நம்பிக்கையும்
விடாமுயற்சியும் நமக்குப் பக்கபலமாய் இருக்கும். சிலந்தி வலைப் பின்னும் நிகழ்வை கண்ட
ராபர்ட் புரூஸ் மீண்டும் போர் செய்து ‘ வெற்றியாளனாகிய
கதையையும் நாம் யாரும் மறந்து விடக்கூடாது.
மனிதன் தன்மீதும் தன்னுடைய செயல் மீதும் நம்பிக்கை
வைக்காதிருந்தால் அவனால் எதுவும் செய்து முடிக்க முடியாது. முயற்சி திருவினை ஆக்கும்’, முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்’ என்னும் தொடர்கள் எல்லாம் நம்பிக்கையின் அடித்தளமாகும்.
முயன்றால் முடியும் என்ற நம்பிக்கையே ஒருவனை வெற்றியானாக்குகிறது.
நாம் எதைப் பற்றி எந்த வகையில் சிந்திக்கிறோமோ
அதை அதே வகையில் அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம். ‘நம்பிக்கையே
வாழ்வின் ஆதாரம்’
‘நம்பிக்கையே இனிமையான எதிர்காலங்களை
அமைக்கும்’ இவற்றை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் நல்ல எண்ணங்களை
வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவோம்.
2. நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்.
விடை
அவையோர்க்கு வணக்கம்!
நான் இப்போது நல்வாழ்விற்குத் தேவையான நற்பண்புகள்
பற்றிப் பேச வந்துள்ளேன்.
நற்பண்புகளுக்கு அடிப்படையாக இருப்பது ஒழுக்கம்.
ஒழுக்கப் பண்புகளால் தொகுக்கப்பட்ட நூலான ஆசாரக்கோவை நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை. என்று வரையறை செய்து எட்டு
நற்குணங்களைக் கூறுகிறது. அவை நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும்
இன்னாதன செய்யாமை,
கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு
சேர்தல் என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களுக்குக்
காரணம் ஆகும் என்கிறது ஆசாரக்கோவை.
நம்மை விடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும்
காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறுவயதிலிருந்த அதைப் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு
உதவி செய்தல், நேர்மையாக நடந்து கொள்ளுதல், ஐம்புலன்களை அடக்குதல், நம்மைவிடச் சிறியவர் என்றாலும் அவர்களுடைய கருத்துகளையும்
ஏற்றுக் கொள்ளுதல். வறுமை நம்மைச் சூழ்ந்தாலும் தீய செயல்களைச் செய்யாதிருத்தல் இவற்றை
நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தல் வேண்டும்.
நற்பண்புகளின் ஒட்டுமொத்த உருவமே ஒழுக்கம்தான்.
அதில் முதலிடம் பெறுவது வாய்மை. நாம் பொய் பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரு பொய் பேசினால் அதனை மறைக்க மீண்டும் மீண்டும் பல பொய்களைப் பேச வேண்டியிருக்கும்.
அவ்வாறு பொய் பேசும்போது பல அவமானங்களைச் சந்திக்க நேரும். பொய்பேசி வெல்வதைவிட மெய்பேசி
தோற்பது சிறந்தது.
அடுத்தது, காலமறிதல்’ காலத்தை அறிந்து செயல்பட வேண்டும். காலந்தவறாமல்
நேரத்திற்குச் செயல்களைச் செய்ய வேண்டும். பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது.
காலம் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் காலத்திற்காகக் காத்திருந்து செயல்பட வேண்டும்.
மழையில் உப்பு விற்பதும்,
காற்றில் மாவு விற்பதும் முட்டாள்தனம். அதனால், வள்ளுவர், காலம்
அறிதல் பற்றிக் கூறியதை நாம் பின்பற்ற வேண்டும்.
அடுத்தது சேவை மனப்பான்மை. நாம் இருக்கும் இடங்களைத்
தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், நம்
வீடு, நம் வீட்டு வாசல், நம் தெரு இவற்றை சுத்தம் செய்தல். இதனை ஒவ்வொருவரும்
மேற்கொண்டால் வீடும் நாடும் சுத்தமாகும்.
மருத்துவ உதவி பெறுவதற்கு வழிகாட்டுதல், விழாக்காலங்களில் பொது இடங்களில் கூட்ட நெரிசலைத்
தவிர்க்க அங்குள்ள கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், எழுத்தறிவற்றவர்களுக்கு
எழுத்தறிவைக் கற்றுக் கொடுத்தல், செய்தித்தாள்களை
வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் இவற்றையெல்லாம் நாம் நம் வாழ்வில் செயல்படுத்தினால் நாமே
நற்பண்புகளில் சிறந்தவர் என்ற பெயர் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவோம்.
சொல்லக் கேட்டு எழுதுக.
அம்பேத்கர் தமது வாழ்க்கையில் 'புதிய திருப்பம்' காண வழி ஒன்றைக் கண்டறிந்தார்.
அது 'படிப்பு,படிப்பு, படிப்பே ஆகும். அதை அடையும் முயற்சியில் அயராது உழைக்கத் தொடங்கினார்.
எப்போதும் புத்தகமும் கையுமாகவே திகழ்ந்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை வேறு செலவுகளைக்
குறைத்துக் கொண்டும் கடன் வாங்கியும் புத்தகங்களை வாங்கித் தந்தார். புத்தகங்கள் படிக்கும்
பழக்கத்தை அம்பேத்கர் கடைசிவரை கடைப்பிடித்தார். வட்டமேசை மாநாட்டிற்காக அம்பேத்கர்
இங்கிலாந்து சென்றார். மாநாடு முடிந்தபிறகு அமெரிக்கா சென்ற அவர் தம் பழைய நண்பர்களையும்
பேராசிரியர்களையும் கண்டு மகிழ்ந்தார். தாய்நாடு திரும்பிய போது பதினான்கு பெட்டிகள்
நிறையப் புத்தகங்களைக் கொண்டுவந்தார்.
அறிந்து பயன்படுத்துவோம்.
தான், தாம் என்னும் சொற்கள்
தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.
இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப்
பன்மை ஆகும்)
(எ.கா) மாடுகள் தமது தலையை ஆட்டின.
கன்று தனது தலையை ஆட்டியது.
கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
1. சிறுமி தனது (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் தமது (தனது தமது) உழைப்பை
நல்கினார்.
3. உயர்ந்தோர் தம்மைத்தாமே (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.
4. இவை தாம்
(தான்/தாம்) எனக்குப்
பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள் தம்மால். (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க
முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம்
அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன.
எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
விடை
முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல்
தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய
சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்
இருந்தன. எனவே, தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா
கூறினார்.
கட்டுரை எழுதுக.
உழைப்பே உயர்வு.
விடை
முன்னுரை:
உழைப்பு என்பது தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச்
சீரும் சிறப்புடன் செய்வதாகும். நாம் மேற்கொண்ட செயலில் வெற்றி பெறுவதற்கு உழைப்பதைத்
தவிர வேறுவழியில்லை. அத்தகைய உழைப்பைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மாணவர்களின் உழைப்பு :
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது சான்றோர் வாக்கு. இது அனைத்து மாணவர்களுக்கும்
பொருந்தும். ஒரு தேர்வில் மட்டும் முதல் மாணவனாக இருந்தால் போதாது. எல்லாத் தேர்வுகளிலும்
முதல் மாணவனாகத் திகழ முயற்சியும் பயிற்சியும் தேவை. இம்முயற்சியும் பயிற்சியுமே உழைப்பு.
மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓர் உயர்ந்த குறிக்கோளை மனதில் நிறுத்தி அக்குறிக்கோளில் வெற்றி
பெற உழைக்க வேண்டும்.
ஊக்கமில்லா உழைப்பு :
சோம்பல், விரைந்து
செய்ய வேண்டியவற்றை தாமதித்துச் செய்யும் இயல்பு, மறதி, தூக்கம் ஆகியன ஊக்கத்தை அறவே ஒழிக்கும் திறமுடையன.
ஊக்கமில்லாதவர் மக்களாகார்;
மரங்களாவர்’ என்பது
வள்ளுவர் மொழி. காட்டில் நிற்கும் மரங்கள் காய்கனிகளைத் தரும். இறைவன் உறையும் திருக்கோயில், இல்லம், தேர், மரக்கலம் ஆகியன செய்வதற்கு மரம் பயன்படுகிறது.
ஆனால், ஊக்கமற்ற மக்களாகிய மரங்களோ எதற்கும் பயன்படுவதில்லை.
ஊக்கமில்லா உழைப்பு வீணானது.
உழைப்பின் பயன் :
நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது
பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். அவ்வாறு ஓயாமல் உழைப்பவர்கள்
விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமேயில்லை.
பொறுமையாகவும் இடைவிடாமலும் உழைத்தால் வெற்றி நிச்சயம். வெற்றியை உருவாக்குவதில் உழைப்பு
மிகப்பெரிய மூலதனம். கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்
என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முடிவுரை :
‘கையும் காலும் தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பாடல்
வரிகளை நினைவில் வைத்து உழைப்போம்; உயர்வோம்.
மொழியோடு விளையாடு
பின்வரும் வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.
(எ.கா) குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்?
குருதி மிகுதியாய்க் கொட்டுவது ஏன்? பெருங்காயத்தால்
1. ஆடை நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?
நூலால்
2. மாடுகள் வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?
போரில்
3. கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?
மாலை
4. வானில் தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?
திங்கள்
நிற்க அதற்குத் தக ...
என் பொறுப்புகள்..
1. வாழ்வுக்கு வெற்றிதரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன்.
2. சமுதாய விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை அறிந்து
போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்.
1. குறிக்கோள் – Objective
2. நம்பிக்கை – Confidence
3. முனைவர் பட்டம் – Doctorate
4. வட்ட மேசை மாநாடு – Round Table Conference
5. இரட்டை வாக்குரிமை – Double voting
6. பல்கலைக்கழகம் – University
7. ஒப்பந்தம் – Agreement
8. அரசியலமைப்பு – Constitution
இணையத்தில் காண்க
இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள் குறித்து இணையத்தில் தேடி
எழுதுக.
கற்பவை கற்றபின்
திருக்குறளில் அணிகள் இடம் பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக்
கண்டறிந்து அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.
விடை
அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக.
(i) பண்என்னாம்
பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
அணி : எடுத்துக்காட்டு உவமையணி
(ii) தேவர்
அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்
அணி : வஞ்சப்புகழ்ச்சி அணி
(iii) இன்மையின்
இன்னாத தியாதெனின்
இன்மையின் இன்மையே இன்னா தது.
அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி
(iv) பண்பிலான்
பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம் தீமை யால்திரிந்து அற்று.
அணி : உவமையணி.
(v) கான
முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
அணி : பிறிதுமொழிதல் அணி