இயல் 3 | 8 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: எச்சம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 3 : Udalai Ombhomin
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முற்றுப் பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் ------ எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
[விடை : ஆ) எச்சம்]
2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம்
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
[விடை : ஈ) பார்த்த]
3. குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
[விடை : அ) காலத்தை]
பொருத்துக.
1. நடந்து – அ) முற்றெச்சம்
2. பேசிய – ஆ) குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – இ) பெயரெச்சம்
4. பெரிய – ஈ) வினையெச்சம்முற்றெச்சம்
விடை
1. நடந்து – ஈ) வினையெச்சம்முற்றெச்சம்
2. பேசிய – இ) பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – அ) முற்றெச்சம்
4. பெரிய – ஆ) குறிப்புப் பெயரெச்சம்
கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.
நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.
பெயரெச்சம் : நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த.
வினையெச்சம் : படுத்து, பாய்ந்து, கடந்து, பிடித்து, பார்த்து.
சிறுவினா
1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
விடை
● பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல்
எச்சம் எனப்படும்.
● இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.
2. 'அழகிய மரம்' - எச்ச வகையை விளக்குக.
விடை
● அழகிய மரம் – இத்தொடரில்
உள்ள அழகிய என்னும் சொல்லின் செயலையோ, காலத்தையோ
அறிய முடியவில்லை. பண்பினை மட்டும் குறிப்பாக அறிய முடிகிறது.
● இவ்வாறு செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல்
பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
விடை
● சான்று: வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
● இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும்
வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு
வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
விடை
வினையெச்சம் இரண்டு வகைப்படும்.
அவை: தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் ஆகும்.
தெரிநிலை வினையெச்சம்:
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல்
என்னும் செயலையும்,
இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு
செயலையும் காலத்தையும் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு வினையெச்சம்:
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக்
காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக்
காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம்
எனப்படும்.
மொழியை ஆள்வோம்!
கேட்க.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு
மகிழ்க.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
உணவே மருந்து.
விடை
வணக்கம்!
‘உணவே மருந்து’ என்ற
தலைப்பில் சில நிமிடம் பேசுகின்றேன்.
உயிர், உடலோடு
கூடிய நிலையில் எப்போதும் புறச்சூழலோடு போராடி வருகிறது. அதில் வெற்றியடைவதே உடல் நலமாகும்; தோல்வி அடைந்தால் நோயில் முடியும். அந்நோயைத்
தீர்த்து இன்பமளிப்பதே மருந்து.
தமிழகத்து உணவு, தொன்றுதொட்டு மருத்துவமுறையில் சமைக்கப்படுகிறது.
வெப்ப நாடான நமது நாட்டுச் சமையலுக்குப் புழுங்கலரிசியே ஏற்றது. அன்றாடச் சமையலில்
கூட்டுவனவற்றுள் மஞ்சள்,
நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்துமல்லி, பித்தத்தைப் போக்கும். சீரகம், வயிற்றுச் சூட்டைத் தணிக்கும். மிளகு, தொண்டைக் கட்டைத் தொலைக்கும்.
பூண்டு, வளியகற்றி
வயிற்றுப் பொருமலை நீக்கிப் பசியை மிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத்
தூய்மைப்படுத்தும். பெருங்காயம், வளியை
வெளியேற்றும். இஞ்சி,
பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்.
தேங்காய், நீர்க்கோவையை நீக்கும். கறிவேப்பிலை, மணமூட்டி உணவு விருப்பை உண்டாகும். நல்லெண்ணெய்
கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.
சீரகம், பூண்டு
கலந்த மிளகு நீர்,
சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.
உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் கீரை நல்லது.
இறுதியாக ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச்
சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டும். வயிறு புடைக்க உண்ணுதல்
நோய்க்கு இடமளிக்கும். உடல் நலனை விரும்புவோர் முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால்
நெடுநாள் நலமாக வாழலாம் என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன், நன்றி.
சொல்லக்கேட்டு எழுதுக.
நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை நிறைவான உணவும்
போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக்
குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். அரிசி
உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான
நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.
அறிந்து பயன்படுத்துவோம்.
உவமைத் தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச்
சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும்
தனிப் பொருள் உண்டு.
(எ.கா)
1. மடை திறந்த வெள்ளம் போல் - தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடைதிறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
2. உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.
பொருத்துக.
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – அ) ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – ஆ) பயனற்ற செயல்
3. பசுமரத்து ஆணி போல – இ) தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – ஈ) எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – உ) எளிதில் மனதில் பதிதல்
விடை
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – இ) தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – – ஈ) எதிர்பாரா நிகழ்வு
3. பசுமரத்து ஆணி போல – உ) எளிதில் மனதில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல - ஆ) பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – அ) ஒற்றுமையின்மை
உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
விடை
குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின்
புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.
2. வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை
வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற
வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.
3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
விடை
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே
என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.
4. உடலும் உயிரும் போல
விடை
உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்
நட்புடன் திகழ்ந்தனர்
5. கிணற்றுத் தவளை போல
விடை
கிணற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே
தம் அறியாமையை வெளிப்படுத்தி விடுவர்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
எழுதுக.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை - நோய் வரக் காரணங்கள் - நோய் தீர்க்கும் வழிமுறைகள்
- வருமுன் காத்தல் - உணவும் மருந்தும் - உடற்பயிற்சியின் தேவை - முடிவுரை
விடை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முன்னுரை:
உடல்நலம் போனால் உயிர்ப்பறவை போய்விடும். அதனால்
தான் ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பார் திருமூலர். இவ்வுலகில் நீண்ட நாள் வாழ
உடல் நலம் பேணல் வேண்டும்.
நோய் வரக் காரணங்கள்:
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக்
காரணம். மாறிப்போன உணவு முறை, மாசு
நிறைந்த சுற்றுச்சூழல்,
மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம்
தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம், உடற்பயிற்சியின்மை உள்ளிட்டவையே பல்வேறு உடல்நலப்
பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன.
நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நம் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் நமது
தவறான வாழ்க்கை முறைதான் காரணம் என்பதே ஆராய்ச்சியின் முடிவாகும். எனவே நமது வாழ்க்கை
முறையில் சில எளிய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமாகவே இத்தகைய நோய்களை நிரந்தரமாகக்
குணப்படுத்த முடியும்.
வருமுன் காத்தல் :
நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட
வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் நம்மை நலமாக வாழவைக்கும்.
எளிமையாகக் கிடைக்கக் கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவும் மருந்தும் :
ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கனிமங்கள் நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர்
உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டும். சோறு காய்கறியும் அரைவயிறு; பால், மோர், நீர் கால் வயிறு; கால் வயிறு வெற்றிடமாக இருத்தல் வேண்டும். உணவை
நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்.
அப்போது தான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு
சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும், அது செரிக்காது; குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். உணவின்
சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்களை முக்கால் வேக்காட்டில்
வேகவைத்து உண்ணல் வேண்டும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.
உடற்பயிற்சியின் தேவை:
‘ஓடி விளையாடு’, ‘மாலை
முழுவதும் விளையாட்டு’
என்பன உடலினை உறுதி செய்ய பாரதி கூறும் வழிமுறைகள்.
உடலின் கழிப்பொருள்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். அதனால் விளையாட்டு, தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
முடிவுரை:
இறைவன் வழங்கிய அருட்கொடையே நமது உடல். அதனைக்
காப்பதே முதற்கடமை. சுவரை வைத்தே சித்திரம் வரைய வேண்டும். உடலை வைத்துதான் உயிரைப்
பேண வேண்டும். உடலைப் பேணுவோம் உயிரைக் காப்போம். நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.
விடை
உரல், உலக்கை
, எண்ணெய், சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், சீரகம், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி
பூ, வத்தல், வெற்றிலை, கடுகு, கொத்துமல்லி, வெந்தையம், ஏலக்காய், கசகசா, புதினா, மல்லி, சோம்பு, பூண்டு.
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
விடை
முயற்சி திருவினை ஆக்கும்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
அறிவே ஆற்றல்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வருமுன் காப்போம்.
சுத்தம் சோறு போடும்.
பருவத்தே பயிர் செய்.
பசித்து புசி.
நிற்க அதற்குத் தக ...
என் பொறுப்புகள்....
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.
கலைச்சொல் அறிவோம்.
1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy
இணையத்தில் காண்க
நாம் நாள்தோறும் உண்ணும் காய்கறிகளின் மருத்துவப் பயன்கள் பற்றித்
தகவல்களைத் தேடித் திரட்டுக.
கற்பவை கற்றபின்
1. 'வந்த' - என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.)
வந்த மாணவன்.
வந்த மாடு.
விடை
● வந்த கபிலன்
● வந்த தண்ணீர்
● வந்த கோகிலா
● வந்த கற்கள்
● வந்த மக்கள்
● வந்த நான்
● வந்த கிளி
● வந்த நீ
● வந்த குதிரைகள்
● வந்த அவர்கள்
2. 'வரைந்து' – என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
விடை
● வரைந்து போனாள்
● வரைந்து விளக்கினேன்
● வரைந்து நடித்தான்
● வரைந்து கூறினாய்
● வரைந்து சென்றனர்
● வரைந்து போற்றினர்
● வரைந்து ஓடியது