பருவம் 3 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : நீதியை நிலைநாட்டிய சிலம்பு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 3 Chapter 2 : Arm, thathuvam, sindhanai
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக,
1. புறாவிற்காகத் தன் உடலையே தந்த மன்னன்
அ) மனுநீதிச்சோழன்
ஆ) பாண்டியன்
இ) சிபி மன்னன்
ஈ) அதியமான்
[விடை : இ) சிபி மன்னன்]
2. கண்ணகியின் சிலம்பு ---------- ஆல் ஆனது
அ) முத்து
ஆ) மாணிக்கம்
இ) பவளம்
ஈ) மரகதம்
விடை : ஆ) மாணிக்கம்
3. அறநெறி - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அறி + நெறி
ஆ) அற + நெறி
இ) அறம் + நெறி
ஈ) அறு + நெறி
[விடை : இ) அறம் + நெறி]
4. கால் + சிலம்பு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) காற்சிலம்பு
ஆ) கால்சிலம்பு
இ) கற்சிலம்பு
ஈ) கல்சிலம்பு
[விடை : அ) காற்சிலம்பு]
5. தண்டித்தல்-இச்சொல்லின் பொருள்
அ) புகழ்தல்
ஆ) நடித்தல்
இ) வழங்குவதல்
ஈ) ஒறுத்தல்
[விடை : ஈ) ஒறுத்தல்]
ஆ. கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
1. அ + ஊர் = அவ்வூர்
2. தகுதி + உடைய = தகுதியுடையதகுதி
இ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
1. கள்வனல்லன் = கள்வன் + அல்லன்
2. செங்கோல் – = செம்மை + கோல்
ஈ. வினாக்களுக்கு விடையளிக்க,
1. கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் யாது?
விடை
கண்ணகியின் கணவனான கோவலன் பாண்டிய மன்னனால் தவறான
தீர்ப்பளிக்கப்பட்டு கொல்லப்பட்டான். இதுவே கண்ணகிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகும்.
2. புகார் நகரின் சிறப்புகள் யாவை?
விடை
ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவிற்கு நீதி
வழங்குவதற்காக, தன் மகனைத் தேர்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த
சிறப்புக்குரியது புகார் நகரம்.
3. பாண்டிய மன்னனின் வெண்கொற்றக் குடை வீழக்காரணமென்ன?
விடை
பொற்கொல்லன் கூறியதைக் கேட்டு ஆராயாமல் கோவலனுக்குத்
தண்டனை அளித்தான் பாண்டிய மன்னன். ஆதலால் அவனுடைய வெண்கொற்றக்குடை வீழ்ந்தது.
உ. சிந்தனை வினாக்கள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இந்தக் குறள் கருத்து யாருக்குப் பொருந்தும்? கண்ணகிக்கா? பாண்டிய மன்னருக்கா? சிந்தித்து விடை தருக.
விடை
இந்தக் குறள் பாண்டிய மன்னருக்குப் பொருந்தும்.
● பாண்டிய மன்னன் பொற்கொல்லன் கூறிய பொய்யை உண்மை
என நம்பி ஆராய்ந்து முடிவெடுக்கவில்லை.
● பிறர் சொல் கேட்டுப் பிழை செய்து விட்டான்.
● ஆட்சிப் பொறுப்பில் மன்னன் இருதரப்பினரின் கருத்துகளுக்கும்
மதிப்பளிக்க வேண்டும். தீர விசாரிக்காமல் தீர்ப்பளித்துவிட்டான். ஆகையால் இக்குறள்
பாண்டிய மன்னருக்கே பொருந்தும்.
கற்பவை கற்றபின்
● பாடத்தில் உள்ள உரையாடலை நாடகமாக நடித்துக்காட்டுக.
● நீதிநெறி தொடர்புள்ள கதை அல்லது உண்மை நிகழ்வுகள் பற்றிய
செய்திகளைக் கூறி, வகுப்பறையில் கலந்துரையாடுக.
விடை
ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே! நீங்கள் படித்த
நீதிக்கதைகள் பற்றி பேசுங்கள்.
மாலா : அனைவருக்கும் வணக்கம்! நான் நேற்று நூலகத்தில்
மரியாதை ராமன் கதையைப் படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மரியாதைராமன் வசித்த ஊரில்
சோமன் என்பவர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்குச்
சரியான கூலி கொடுக்கமாட்டார்.
அவர் ஒருமுறை தன்னுடைய பணப்பையைத் அவர் தவறவிட்டுவிட்டார்.
அந்த பணப்பையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் தருவதாகக் கூறினார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு பூபாலன் என்பவரின் கையில் அப்பணப்பை கிடைத்தது. அப்பணப்பை
சோமனுடையது என்று அறிந்து அவனிடம் கொண்டு சென்று கொடுத்தார். ஆனால் அவன் பணம் மட்டும்
இருப்பதாகவும் வைர மோதிரம் இல்லையென்றும் கூறினான்.
சன்மானம் கொடுக்க மனமில்லாததால் பொய் கூறுகிறான்
என்பதை அறிந்த ஊர் மக்கள் மரியாதைராமனிடம் சென்றனர். மரியதைராமன் நடந்தவற்றைக் கேட்டு
அறிந்து, “பையில்
வைரமோதிரம் இல்லாததால் அது சோமனுடைய பை இல்லை என்றும் பணப்பையைத் தொலைத்ததாக வேறு யாரும்
கூறவில்லை என்பதாலும் இப்பையைப் பூபாலனுக்குக் கொடுத்துவிடலாம்” எனத் தீர்ப்பு
கூறினார். ஏமாற்ற நினைத்த சோமன் ஏமாந்து போனான். நல்லது செய்ய நினைத்த
பூபாலன் நன்மையடைந்தான்.
நிலா : நான் தெனாலிராமன் கதைகளுள் ‘நீர் இறைத்த
திருடர்கள்’ என்ற
கதையைப் படித்தேன். அதில் தெனாலிராமனின் கிணற்றில் நீர் மிகவும் ஆழத்தில் இருந்தது.
தண்ணீர் இறைப்பது அவனுக்குக் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஒருநாள் இரவு நான்கு திருடர்கள்
அவனுடைய தோட்டத்தில் ஒளிந்திருப்பதைக் கண்டான். தன் மனைவியிடம் வீட்டில் உள்ள நகைகளைப்
பெட்டியில் போட்டு எடுத்து வரும்படிக் கூறினான்.
“அவற்றைக் கிணற்றில் போட்டு விடலாம். இப்போது வறுமை
நீடிப்பதால் திருடர்கள் பயம் அதிகமாக உள்ளது” என்று கூறினான். அதில் கல், மண் போன்றவற்றை
வைக்கும்படி மனைவியிடம் சைகை செய்தான். அவ்வாறே பெட்டியைக் கிணற்றில் போட்டுவிட்டு
உள்ளே சென்றனர். திருடர்கள் தங்கள் வேலை எளிமையாகிவிட்டது என எண்ணி கிணற்றில் இருந்து
தண்ணீரை இறைத்து ஊற்றிய படியே இருந்தனர்.
பொழுதும் விடிந்தது. அவர்கள் மறுநாள் பார்த்துக்
கொள்ளலாம் என்று கூறிவிட்டுச் செல்லும்போது, தெனாலிராமன் அங்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து
வரும்படிக் கூறினான். “இன்று இறைத்த நீர் இரண்டு நாட்களுக்குப் போதுமானது” என்று கூறினான்.
இதனைக் கேட்ட திருடர்கள் தெனாலிராமன் புத்திசாலித்தனமாக தங்களை வேலை வாங்கியதை எண்ணியும், கொஞ்சம் தயங்கினாலும்
தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்றும் பயந்து ஓடினர்.
மாலா : இதுபோல நீதிக்கதைகள் நம்மைப் போன்ற மாணவர்களுக்கு
ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கின்றன.
நீலா : சரியாகச் சொன்னாய் மாலா. நான் தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால்
கதைகளைப் படித்தேன். இக்கதைகளும் நமக்கு நீதியைப் புகட்டுகின்றன. தெனாலிராமனின் அறிவுக்கூர்மையும்
பீர்பாலின் புத்திக் கூர்மையும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஆசிரியர் : மாலா, நீலாவைப் போல் மற்றவர்களும் நூலகம் செல்லும்போது
நீதிக்கதையைப் படித்து பயனடையுங்கள். வேறு யாராவது பேச விரும்புகிறீர்களா!
கலா : நான்கூட இதுபோன்ற கதைகளை என் தாத்தா பாட்டியிடம்
கேட்டிருக்கிறேன். என்னுடைய தாத்தா நேரம் இருக்கும் போதெல்லாம் ! என்னைப் பூங்காவிற்கு
அழைத்துச் செல்வார். அப்போது நிறைய கதைகளைக் கூறியுள்ளார். இவர்கள் படித்துப் பெற்ற
அனுபவத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.
ஆசிரியர் : நன்று. தாத்தா பாட்டி இருவரும் நடமாடும் நூலகங்கள், அவர்களுடைய அனுபவமே ஒரு புத்தகம்தான். நாளைய வகுப்பில் தொடரலாம்.