திருவள்ளுவர் | இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal
கலை – ச
வாழ்வியல் இலக்கியம்
திருக்குறள்
- திருவள்ளுவர்
புல்லறிவாண்மை (85)
1) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும் ஓர் நோய்.
சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல்
இருப்பவன் உயிர், சாகும்வரை உள்ள நோய்!
2) காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
அறிவில்லாதவனுக்கு அறிவுரை சொல்பவன் அறிவில்லாதவனாக மாறிவிடுவான்!
அறிவில்லாதவன் அவனுக்குத் தெரிந்த அளவில் அறிவுடையவனாகத் தோன்றுவான்!
இகல் (86)
3) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம் .
குடிமை (96)
4) அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.*
கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும்,
ஒழுக்கமான குடியில் பிறந்தவர், தவறு செய்வதில்லை .
சான்றாண்மை (99)
5) அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.*
பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் சமத்துவ எண்ணமும்
இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்!
அணி - ஏகதேச உருவக அணி
6) ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
செயல் செய்பவரின் ஆற்றல், பணிவுடன் நடத்தல். அதுவே சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி.
7) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.
ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக்
கரை போன்றவர் நற்பண்புகளிலிருந்து மாறமாட்டார் !
அணி - ஏகதேச உருவக அணி
நாணுடைமை (102)
8) பிறர்நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து."
பிறர் வெட்கப்படும் பழிக்குக் காரணமாய் இருந்தும் தான் வெட்கப்படவில்லை என்றால், அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப்போகும்.
உழவு (104)
9) சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.*
பல தொழில்களால் இயங்கினாலும் உலகம் ஏருக்குப் பின்னாலேயே போகும்! அதனால் வருந்தி உழைத்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
10) உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால், அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர்.
அணி - ஏகதேச உருவக அணி