பருவம் 2 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம் : நேர்மை நிறைந்த தீர்ப்பு: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 3 : Tholil, vanigam
மதிப்பீடு
வினாக்களுக்கு விடையளிக்க,
1.
அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு யாது?
விடை
அரசியிடம் கிராமத் தலைவர் கொண்டுவந்த வழக்கு:
“செல்வந்தர் ஒருவர், அரிய சாதனை புரிபவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பரிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாரிடம் கொடுத்தார். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவர்கள் நால்வரும் போட்டி போட்டனர்.
நால்வருடைய அரிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊர்ப் பஞ்சாயத்தினர், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பரிசுத் தொகையை நால்வருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனர்.
ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாதனையே பெரியது என்று கூறி, பரிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனர். அதனால், தாங்களே இவர்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாரித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சரியான தீர்ப்பளிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார் கிராமப் பஞ்சாயத்து தலைவர்.
2.
முருகேசன் தாம் என்ன சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார்?
விடை
“நான் ஒரு வியாபாரி. மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பார்த்தாள்.
அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது. நான் பாய்ந்துசென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரைகூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊர்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்.
ஓர் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பெரிய சாதனை இல்லையா? அதனால்தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்” என்று சொன்னார் முருகேசன்.
3.
விவசாயியின் சாதனைதான் உயர்ந்தது என்று அரசி கூறக் காரணம் என்ன?
விடை
“முதியவரான விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். உண்மையில் இது பெரிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பம்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது.
விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது; நோய்நொடி இருக்காது; வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவர் இவர்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்” என்று நேர்மை நிறைந்த தீர்ப்பை அரசி வழங்கினார்.
சிந்தனை வினா
நண்பர்கள் உன்னை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். அவர்கள் சென்றபிறகு,
பணப்பை ஒன்று நாற்காலியில் இருப்பதைக் காண்கிறாய். இந்நிலையில் நீ செய்யப்போவது என்ன?
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
ஆ) உரியவரே தேடிக்கொண்டு வரட்டும் எனக் காத்திருப்பேன்.
இ) நான் பார்த்ததால், எனக்குத்தான் உரியது என வைத்துக்கொள்வேன்.
விடை
அ) பணப்பையை உரியவரிடம் கொடுப்பேன்
கற்பவை கற்றபின்
● நேர்மையால் உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்க.
● நேர்மை நிறைந்த தீர்ப்பு கதையை நாடகமாக நடித்துக்காட்டுக.