Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea

   Posted On :  30.08.2023 05:52 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இயல் ஏழு

இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இந்திய தேசிய இராணுவம் .......... இன் தலைமையில் .......... உருவாக்கினர்.

) சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர்.

) சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்.

) மோகன்சிங், ஜப்பானியர். ) மோகன்சிங், இந்தியர்.

விடை:

) மோகன்சிங், ஜப்பானியர்.

 

2. கூற்று : இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.

காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

) கூற்று சரி, காரணம் சரி.

) கூற்று சரி, காரணம் தவறு.

) கூற்று தவறு , காரணம் சரி.

) கூற்று தவறு, காரணம் தவறு.

விடை:

 ) கூற்று சரி, காரணம் சரி.

 

குறுவினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

விடை:

• கேப்டன் தாசன்       

ஜானகி

• அப்துல் காதர்        

• இராஜாமணி

• சிதம்பரம்             

• கேப்டன் லட்சுமி

• லோகநாதன்          

இராமு

 

2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

விடை:

நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

 

3. 'டெல்லி நோக்கிச் செல்லுங்கள்' என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

விடை:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தார். 1943-ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் நாள் பொறுப்பை ஏற்கும்போது டெல்லி நோக்கிச் செல்லுங்கள்' (டெல்லி சலோ) எனப் போர் முழக்கம் செய்தார்.

 

சிறுவினா

1. குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.

விடை:

. இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

. இரண்டாம் உலகப் போர்ச்சூழலில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, படகு வழியாகத் தப்பி, கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அைைலகளில் சிக்கித் தவித்து 45 பேரும் ஜப்பானின் கியூசு தீவை அடைந்து பயிற்சி பெற்றனர்.

. பனிபடர்ந்த மைதானத்தில் காலை 5 மணிக்கு குளிர் ஜீரோ (சுழியம் ) டிகிரிக்கும் கீழ் இருக்கும் நிலையில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றனர். இவர்களே டோக்கியோ கேடட்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.

 

2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

விடை:

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு பகுதி கார்கில். ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதி. பனிபடர்ந்த இமயமலைப் பகுதி எப்பொழுதும் குளிர் சுழியத்திற்கு (-) கீழ்தான் இருக்கும்.

1999ஆம் ஆண்டு குளிர்காலத்தில் -20° குளிர்நிலவிய நிலையில் இந்திய இராணுவம் படைகளை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் கார்கிலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவினர். மாடு மேய்ப்போர் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவ கேப்டன் சவுரப் காலியாவிடம் தெரிவித்தனர். இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப்படை அசுரவேக தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து இந்திய கடற்படை.

போர் விமானங்களும் குண்டுகளை வீசின. மிக் 27, மிக் 21, எம்.. 17 ஆகிய 3 விமானங்களை இந்தியா இழந்தது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களில் 4000 பேரும் இந்திய தரப்பில் 527 பேரும் பலியானார்கள். போர் முடிவில் கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. பேரிடர் காலங்களில் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது.

 

நெடுவினா

1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.

விடை :

முன்னுரை:

இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது.

நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.

தூண்கள்:

1943ம் ஆண்டு, நேதாஜிடெல்லி சலோஎன்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' ஆவார்.

பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான் என்பவர், "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் தான் " என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.

இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:

இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.

இரண்டாம் உலகப்போரில் தமிழர்:

இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.

தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளதுஎன்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.

மரணம் பெரிதன்று:

1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின் பொருள் தெரிந்தால் தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்'' என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.

நேதாஜியின் பாராட்டு:

இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.

முடிவுரை:

தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்

 

கற்பவை கற்றபின்



1. நீங்கள் நாட்டிற்கு உங்கள் பங்கினை அளிக்க விரும்புகிறீர்களா? இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தகுதி அவர்களுக்கான பணிகள் குறித்த கருத்துகளைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக.

 விடை :

கலந்துரையாடல் 

கலந்துரையாடுபவர்கள் : ஆசிரியர், மணிமாறன், மதிமாறன், எழில் ஆகியோர்.

மணிமாறன் : ஐயா! இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற இக்கட்டுரையைப் படித்தவுடன், எனக்கும் இராணுவத்தில் சேர ஆசையாக உள்ளது.

மதிமாறன் : எனக்கும் தான் ஐயா!

எழில்: ஐயா! எனக்கும்தான்! பெண்களும் சேரலாம் தானே ஐயா!

ஆசிரியர் : எல்லோருமே சேரலாம் எழில்..

மணி : ஐயா! அதற்கான வழிமுறைகள் தகுதிகள் என்ன ஐயா.... ஆசிரியர் : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(இது குறைந்தபட்ச கல்வித்தகுதி) கல்வித் தகுதிக்கு ஏற்ப பணிகள் உண்டு.

மதிமாறன் : ஐயா... உடல் தகுதிகள் பற்றி

மணிமாறன் : நன்கு உயரமாக வேண்டுமா?ஐயா!

ஆசிரியர் : 157.5 செ மீ உயரம் இருக்க வேண்டும். எந்த வகையான உடற்கோளாறும் இருக்கக்கூடாது.

எழில் : ஐயா பெண்களுக்கு...

ஆசிரியர் : பெண்கள் இராணுவத்தில் சேர 'வுமன் என்ட்ரி ' உள்ளது. அதன் மூலம் சேரலாம்.

மதிமாறன் : ஏதாவது தேர்வு எழுத வேண்டுமா?

ஆசிரியர் : ஆமாம் மாறா! என். டி. . எனப்படும் தேர்வு எழுத வேண்டும்.

மணிமாறன் : எப்போது தேர்வு நடக்கும் ஐயா!

ஆசிரியர் : ஏப்ரல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.

எழில் : ஐயா! தேர்வில் தேர்ச்சியடைந்தால் உடனே சேர்ந்து விடலாமா?ஐயா.

ஆசிரியர் : தேர்ச்சி பெற்றபின், ஓராண்டு இராணுவப் பயிற்சி தொழில்நுட்ப பயிற்சி 3 ஆண்டுகள் பணி வழங்கப்பட்ட பின் ஓர் ஆண்டு பயிற்சி என ஐந்து ஆண்டுகள் பயிற்சியளிக்கப்பட்டு முறைப்படி இராணுவப் பணியில் சேர்க்கப்படுவர்.

மதிமாறன் : இராணுவ வீரர்களின் பணிகள் என்னென்ன ஐயா!

ஆசிரியர் : நாட்டையும், மக்களையும் காப்பது, எல்லைக் கண்காணிப்பு பயங்கரவாத எதிர்ப்புப்பணி, அரசு விழாக்களுக்கு பாதுகாப்பு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட உதவுதல், இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணி மற்றும் நிர்மாணிப்புப் பணிகள் மலைப்பகுதி, காடுகளில் கட்டுமான பணிகள். இவ்வாறு ராணுவ வீரர்கள் செய்யும் பணிகள் பலவாகும்.

மணிமாறன் : ஐயா! கேட்க கேட்க எனக்கும் அதில் இணைய வேண்டும் என்ற ஆவல் மிக்கெழுகிறது ஐயா!

எழில் : வணக்கத்துக்கும், பாராட்டுக்கும் உரிய தியாகப்பணியாம் ராணுவப் பணியில் நானும் என்னை அதில் இணைத்துக் கொள்வேன் ஐயா.

மதிமாறன் : ஐயா! உங்கள் விளக்கம் எங்கள் ஐயங்களைப் போக்கியதோடு எங்கள் மனதில் நாட்டுப்பற்றையும் ஊட்டி விட்டது.

மூவரும் : நன்றி ஐயா!

 

2. எனக்குப் பிடித்த விடுதலை போராட்ட வீரர் என்ற தலைப்பில் அவர் தம் வாழ்க்கை நிகழ்வுகளைக் காலக்கோட்டில் உருவாக்குக

விடை :

எனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர்சுப்பிரமணிய சிவாஅவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிக்கும் காலக்கோடு.



கவிதைப் பேழை

இயல் ஏழு

சீவக சிந்தாமணி


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

) வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்.

) செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்.

) பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்.

விடை :

) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

 

குறுவினா

1. கருக்கொண்ட பச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

விடை:

கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

 

சிறுவினா

1. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

விடை:

. வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.

. பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.

. மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.

. செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.

. ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

 

நெடுவினா

1. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

விடை:

முன்னுரை:

சீவகசிந்தாமணியில் "நாமகள் இலம்பகத்தில் " நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத் நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.

வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:

ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்தது.

தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும் முன் விழும் வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை , பலாச்சுளைகளோடு , வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.

மண்வீசும் வயல்வளம்:

ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.

இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:

கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.

அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

ஆயிரம் விழாக்கள்:

வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.

முடிவுரை:

இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.

 

கற்பவை கற்றபின்


1. அருகிலுள்ள இயற்கைக் காட்சிகளைக் குறிப்பெடுத்து ஓவியம் தீட்டுக.

விடை:


. நான் வசிக்கும் இடத்தின் அருகில், ஒரு குளம் இருக்கின்றது.

. குளத்தைச் சுற்றிலும் வயல் வெளிகள் உள்ளன.

. குளத்தின் கரையில் ஓர் ஆலமரம் உள்ளது.

. பறவைகளும், கிளிகளும் அதில் வசித்து மகிழ்கின்றன. பறவைகள் தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காட்சி மனதை மயக்கும்.

. வயல் வெளிகளில் கூட்டமாய் உழவர்கள் வேலை செய்யும் போது ஆரவாரம் காணப்படும்.

மாலை நேரத்தில் மயிலும் தோகை விரித்து ஆடும்.

 

2. உங்கள் பள்ளி வேரூன்றிய நாள் தொடங்கி வளர்ந்த வரலாற்றையும், அதன் சிறப்புகளையும் கட்டுரையாக்குக.

 விடை:

எங்கள் பள்ளி

முன்னுரை : நான் பயிலும் பள்ளி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆகும். அன்ன சத்திரம் ஆயிரம்,ஆலயங்கள் பல்லாயிரம் கட்டுவதைக் காட்டிலும் ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடி புண்ணியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அல்லவா! எழுத்தறிவு கொடுத்துக் கொண்டிருக்கும் அறிவுத் திருக்கோவில் எம் பள்ளி .

தோற்றம் : எங்கள் பள்ளி அப்போதைய ஆங்கில அரசால் 1918 ம் ஆண்டு ஒன்று முதல் எட்டு வரை உள்ள நடுநிலைப் பள்ளியாகத் தோன்றி வேரூன்றி வளர ஆரம்பித்தது.

வளர்ச்சி : பின்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. பின் 1978 இல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்று கம்பீரமாக நகரின் மையத்தில் உள்ளது.

சாதனைகள் : இந்த ஆண்டு எம் பள்ளி நூற்றாண்டு விழா காண இருக்கின்றது. பல அறிஞர்களை,விற்பனர்களை, சமூக சேவகர்களை, ஊருக்கு உழைக்கும் உத்தமர்களை, மருத்துவர்களை, பொறியாளர்களை, வழக்குரைஞர்களை, அறிஞர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கி நல்லறிவு புகட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவுக் கோயிலாகத் திகழ்கிறது.

முடிவுரை : பல்துறைகளிலும் முத்திரை பதிக்க பலருக்கும் வழிகாட்டிய அறிவுப் பெட்டகமாகவும், பலருடைய வாழ்வை உயரத்திற்குக் கொண்டு சென்ற ஏணியாகவும் இன்று வரை திகழ்கிறது. பல தலைமுறை கண்ட எம் பள்ளி, இன்னும் பல புதிய தலைமுறைகளை உருவாக்க வாழ்த்தி வணங்குகிறேன்.

 


கவிதைப் பேழை

இயல் ஏழு

முத்தொள்ளாயிரம்

 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இளங்கமுகு, செய்கோலம் - இலக்கணக் குறிப்புத் தருக.

) உருவகத்தொடர், வினைத்தொகை

) பண்புத் தொகை, வினைத்தொகை

) வினைத்தொகை, பண்புத்தொகை

) பண்புத்தொகை, உருவகத்தொடர்

விடை:

) பண்புத்தொகை, வினைத்தொகை

 

2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

) வருக்கைஇருக்கை

) புள் - தாவரம்

) அள்ளல்சேறு

) மடிவு - தொடக்கம்

விடை :

) அள்ளல் - சேறு

 

3. நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

) பாண்டிய நாடு, சேர நாடு

) சோழ நாடு, சேர நாடு

) சேர நாடு, சோழ நாடு

) சோழ நாடு, பாண்டிய நாடு

விடை :

) சேர நாடு, சோழ நாடு

 

குறுவினா

1. அள்ளல் பழனத்து அரக்காம்பால் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

விடை:

. அள்ளல் - சேறு

. பழனம்வயல்

 

சிறுவினா

1. சேர, சோழ, பாண்டி நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

விடை:

சேரநாடு:

சேறுபட்ட நீர்வளம் மிகுந்த வயல்பகுதிகளில் அரக்கு நிறம்கொண்ட செவ்வாம்பல் மலர்கள் மெல்ல தம் வாயவிழ்ந்து விரிந்தன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தம் தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

சோழநாடு:

சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்துநாவலோஎன்று கூவி அழைப்பர் நாவலோஇந்நாள் வாழ்க சிறக்கஎன்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

பாண்டியநாடு:

வெண்கொற்றக்குடையை உடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்துகிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக்குவியல்களைப்போலவே காட்சியளித்தன என்று முத்தொள்ளாயிரம் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துக் கூறுகிறது.

 

கற்பவை கற்றபின்



1. நீங்கள் வசிக்கும் பகுதி, வேந்தருள் யார் ஆண்ட நாடு, என்பதை அறிந்து அவர்களைப் பற்றிய செய்தித்தொகுப்பேடு ஒன்றை உருவாக்குக.

விடை:

நாங்கள் வசிக்கும் பகுதி நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசி என்னும் ஊர் ஆகும்.

தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக் கொண்ட மன்னன்சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்" ஆவார். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையே தலைநகராகக் கொண்டு தென்காசி பெரிய கோயிலில் உள்ள சிவந்த பாதவூருடைய ஆதீன மடத்தில் முடிசூட்டிக் கொண்டனர்.

தென்காசி பெரியகோயில் பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் காணப்படுகின்றன.

தென்காசிப் பகுதியை ஆண்ட பாண்டியர்களில் "கொல்லங்கொண்டான் " என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான். தென்காசியில் பாண்டிய மன்னர்களின் ஆளுகை 17ம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றது அறியப்படுகிறது.

தென்காசி கோவிலில் உள்ள இவனது மெய்க்கீர்த்தி "பூமிசைவளிதை நாவினில் பொலிய'' எனத் தொடங்குகிறது. பொன்னி பெருமான், மானக்கவசன் போன்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். திருக்குற்றாலத்தில் சேர மன்னன் ஒருவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான்.


ஆற்றிய அறப்பணிகள்:

. ஐந்து ஊர்களில் அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான்.

. திருக்குற்றாலம், திருப்புடைமருதூரில் உள்ள சிவாலயங்களுக்கு மண்டபங்கள் அமைத்தான்.

. நெல்லை சிவன் கோவிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான்.

. செங்கோல் ஆட்சி நடத்திய சடையவர்மன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான்.

. இவ்வாறு எங்கள் ஊரை ஆண்ட பாண்டிய வேந்தனின் பெருமைகளை எழுதிக்கொண்டே போகலாம். எம் ஊரில் வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

 

2. நெல் விதைப்பு முதல் அரிசி புடைப்பது வரை, வயல்களக்காட்சியை அறிந்து தகுந்த படங்களுடன் காட்சிப்படுத்துக.

விடை



 

கவிதைப் பேழை

இயல் ஏழு

மதுரைக்காஞ்சி

பாடநூல் வினாக்கள்

 

குறுவினா

1. மதுரைக் காஞ்சி - பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுக.

விடை:

. காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள். "

. மதுரை " நகரைக் குறிக்கும். மதுரை நகரின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றியக் கருத்துகளைக் கூறுவதாலும், இப்பெயர் பெற்றது.

 

சிறுவினா

1. "மாகால் எடுத்த முந்நீர் போல” - இடஞ்சுட்டி பொருள் விளக்குக.

விடை:

இடம் :

மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :

மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றிக் குறிப்பிடும் போது புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

விளக்கம் :

ஆறு போன்ற தெருக்களில் பல்வேறு பொருள்களை வாங்க வந்த பல்வேறு மொழி பேசும் மக்களின் ஒலியோடு விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் ஒலிக்கின்றன. “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல்ஒலிக்கிறது. இதனையேமாகால் எடுத்த முந்நீர் போலஎன்றார் மாங்குடி மருதனார்.

 

கற்பவை கற்றபின்


1. ஊரின் பெயர்க்காரணம் எழுதி வகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை :

 

கலந்துரையாடுபவர்கள்: செல்வன், கிள்ளை , மது.

இன்று நாம் வகுப்பில் மதுரையைப் பற்றி பல அரிய செய்திகள் அறிந்து கொண்டோம். அது போல் எங்கள் ஊருக்கும் பெயர் ஏற்பட காரணங்கள் உண்டு. நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்வோமா!

செல்வன் : மது, கிள்ளை நான் முதலில் சொல்லட்டுமா.

மது : சொல் செல்வா! உன் ஊர் ஈரோடு தானே.

செல்வன் : ஆம், ஈரோடு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா ........ துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான திருமாலின் வாயில் காப்போனாகிய தைபர் என்பவரின் தலை ஓடு நான்காகப் பிளவுபட்டதாம். அதில் பெரிய ஓடு வீழ்ந்த இடம் பேரோடு என்றும், சிறிய ஓடு விழுந்த இடம் சித்தோடு என்றும், வெள்ளை ஓடு விழுந்த இடம் வெள்ளோடு என்றும், ஈர ஓடு விழுந்த இடம் ஈரோடு என்றும் பெயர் பெற்றதாம். சித்தோடு, பேரோடு, வெள்ளோடு ஆகிய ஊர்கள் ஈரோட்டிற்கு அருகிலே உள்ளன.

கிள்ளை : அப்படியாடா ஆச்சரியமாக இருக்கிறதே........

சரி செல்வன் எங்கள் சொந்த ஊர் தூத்துக்குடி. அதன் பெயர்க்காரணம் என்ன தெரியுமா?

தூர்த்து + குடி. ‘தூர்த்து' என்பதன் பொருள்கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்' என்பது ஆகும். 'குடி' என்பதற்கு 'குடியமர்தல்' என்று பொருள். கடலில் இருந்து உருமாறி மக்கள் வாழத் தகும் நகராக மாறியதால் தூத்துக்குடி' எனப் பெயர் பெற்றதாம்.

மது :  எங்கள் ஊர் சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி ஆகும். அதற்கு ஏன் அப்பெயர் வந்தது தெரியுமா?

மல்லிகைப்பூக்கள் (செடிகள்) அதிக அளவில் பயிரிடப்பட்ட பகுதி இது. இவ்விடத்தை சமஸ்கிருதத்தில் 'புஷ்பகவல்லி' என்றும், தமிழில் பூவிருந்தவல்லி' என்றும் வழங்கினர். நாளடைவில், பூந்தமல்லியாக மாறிவிட்டது.

நாம் மூவரும் நம் ஊரின் பெயர்க்காரணத்தை அறிந்து வைத்திருக்கிறோம் மகிழ்ச்சியாக உள்ளது அல்லவா?

(மாணவர்களே உங்கள் ஊரின் பெயர்க்காரணத்தையும் அறிந்து கொள்ளுங்கள்)

 

2. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட உலகின் தொன்மை நகரங்களில் ஒன்று மதுரை. அந்நகரத்தில் இயலும் இசையும் நாடகமும் பொங்கிப் பெருகின - இத்தொடர்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் கருத்துகளைத் திரட்டி ஐந்து மணித்துளிகள் பேசுக.

விடை:

மதுரையின் சிறப்புகள் (மேடைப் பேச்சு)

. இந்திய துணைக்கண்டத்தில் மிகவும் தொன்மையான வரலாற்றைக் கொண்ட நகரம் மதுரை ஆகும். தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம். 2500 ஆண்டுகளுக்கு மேலான பழம் பெருமை வாய்ந்தது. கி.மு 4 முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்ககாலம். இக்காலத்தில் தமிழ் அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம்.

. கௌடில்யர், மெகஸ்தனிஸ் ஆகியோரின் குறிப்புகளிலும் மதுரை பெருமை பெறுகிறது.

. மரபுச்சின்னமாக மதிக்கப்படும் மதுரை பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட நகரமாகும்.

. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச்சோழர், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், மதுரை சுல்தான், விஜயநகரப்பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் ஆண்டுள்ளனர்.

. பல வரலாற்று நினைவிடங்களைக் கொண்டிருந்த போதிலும் மீனாட்சியம்மன் கோவிலும். திருமலை நாயக்கர் அரண்மனையும் புகழ் பெற்றவை. சித்திரைத் திருவிழாவும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும் இந்நகரின் புகழ்பெற்ற திருவிழாக்கள் ஆகும். சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிறப்பு நிகழ்வாகும்.

. பொங்கல் திருநாளில் நகரின் அருகில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஏறுதழுவுதல் நிகழ்வும் பெயர் பெற்றது ஆகும்.

. இந்நகரம் கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக் கூடல், திரு ஆலவாய் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

. 7ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற்புராணத்திலும் மதுரையின் சிறப்புப் பெயர்கள், பெருமைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

. நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற அனைத்து இலக்கியங்களிலும் மதுரையின் பெருமை பேசப்படுகிறது.

. சிலப்பதிகாரம் மூலம் மதுரையில் இயலும், இசையும் பொங்கிப் பெருகியது என்பதை உணரலாம். இவ்வாறு மதுரையின் பெருமை வரலாற்று சிறப்பு என பேசிக் கொண்டே போகலாம். அதற்கு முடிவே இராது.

நன்றி! வணக்கம்.



விரிவானம்

இயல் ஏழு

சந்தை

பாடநூல் வினாக்கள்

 

குறுவினா

1. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.

விடை:

உற்பத்தியாகும் பொருள் :

மனிதர்கள் நாடோடியாக, வேட்டையாடி கிடைத்த உணவை உண்டனர். பின்னாளில் நால்வகை நிலங்களில் உற்பத்தி பெருகியது. காய்கறி, கீரை, தானியம் ஆகியவற்றை உற்பத்தி செய்தனர்.

சந்தையில் காணும் பொருள்:

உழவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்கவும், மாற்றுப்பொருளை வாங்கவும் முச்சந்தி, நாற்சந்தி என மக்கள் கூடும் இடங்களில் கடை விரித்துப் பொது வணிகமாக்கினர்.

 

நெடுவினா

1. எங்கள் ஊர் சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக.

விடை:

நாளிதழ் செய்தி

மானூர் சந்தையின் புகழ்:

ஜூன் 16 - நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (சனிக்கிழமை) மட்டும் கூடும். எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

காய்கறிகள், தானிய வகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தை வெளியில் உண்டாம்.

எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.

வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு.

சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.

நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.

 

கற்பவை கற்றபின்


1. சந்தை நிகழ்வுகளை நாடகமாக நடித்துக் காட்டுக.

விடை:

நாடகம்

நேரம் : காலை

உறுப்பினர் : தாத்தா, கீர்த்தி, குமரன், தாத்தாவின் நண்பர்

தா.நண்பர் : வாங்க! வாங்க! என்ன பேரன் பேத்தியோடே வரீக!

தாத்தா : ஆமா ஆமா ...... ஊர்ல இருந்து வந்திருக்காக. அங்கெல்லாம்மால்' போய் பழகுனவங்க... வித்தியாசமா இருக்கட்டுமேனு கூட்டிட்டு வந்தேன்.

தா.நண்பர் : ...... அப்படியா ...... சரி சரி ....

நான் பொருள்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நீங்க சீக்கிரம் போங்க கொஞ்ச நேரத்துல கூட்டம் அலைமோதும்.

 

காட்சி - 2

(தாத்தா, கீர்த்தி, குமரன்)

குமரன் : என்ன தாத்தா கூட்டம் அலைமோதுமா என்ன?

தாத்தா : ஆமாம் குமரா! சுற்றி உள்ள அத்தன ஜனமும் இந்த சந்தைக்குத் தான் வருவாக......

கீர்த்தி : அப்படியென்ன தாத்தா இந்த சந்தையில் விசேஷம்.

தாத்தா : இந்த சந்தையிலே கிடைக்காத பொருளே கிடையாது...... கடுகு, சீரகத்துல இருந்து, மண்பானை, அலுமினியப்பானை, பூ, பழம், இரும்புப்பொருள், துணிமணின்னு என்னென்ன உண்டோ அனைத்தும் வாங்கலாம்.

குமரன் : விலை எல்லாம் எப்படித் தாத்தா இருக்கும்?

தாத்தா : கண்ணு ..... கிராமத்து சந்தையில், உற்பத்தியாளன் தான் விற்பனையாளன். பிற ஊருக்கு அனுப்புவது, இடைத் தரகர்கள், குளிரூட்டப்பட்ட அறை என்று எந்தக் கூடுதல் செலவும் கிடையாது. உற்பத்தியாளரே தருவதால் சரியான விலைக்குக் கிடைக்கும்.

கீர்த்தி : தாத்தா ....... அதோ அந்தப்பக்கம் கோழி, ஆடு, மாடும், இருக்கு

தாத்தா : ஆமாம்மா..... உழவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கின்ற கோழி, கோழிக்குஞ்சு, ஆடு, மாடுகளைக் கூட்டி வந்து விலை கூறி விற்பர். கால்நடைகளை வளர்த்து விற்பதும் சிலருக்கான தொழில் ......

இருவரும் : சந்தையைப் பற்றிக் கேட்கவே ஆசையா இருக்கு தாத்தா. இனி நாங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம், சந்தை கூடும் நாளில் எங்களை அழைத்து வாங்க தாத்தா! சரியா!.

 

2. சந்தை/அங்காடியில் உள்ள பொருள்களுக்கான விலைப்பட்டியல் எழுதிய விளம்பரப்பதாகை

ஒன்றை உருவாக்குக.

விடை:

முத்து மளிகை

தரமே நிரந்தரம்

விலைப்பட்டியல்

 

பொருள்கள் - விலை (₹)

அரிசி 1 கிலோ      -     55

து.பருப்பு 1 கிலோ    -      75

. பருப்பு 1 கிலோ    -     80

.பருப்பு 1 கிலோ     -       70

சோப்புத்தூள் (சலவைத்தூள்) 1 கிலோ - 80

தே.எண்ணெய் 1 லி    -      200

.எண்ணெய் 1 லி      -     200

.எண்ணெய் 1லி      -    180

நாட்டுச் சர்க்கரை 1கி    -    60

நாட்டுக் கோழி முட்டை 1  -     10

கடுகு 1 கிலோ      -       100

சீரகம் 1 கிலோ      -      100

மிளகு 1 கிலோ       -      400

வெந்தயம் 1 கிலோ     -     300

கம்பு 1 கிலோ       -        60

சோளம் 1 கிலோ     -      55

சர்க்கரை (சீனி)       -    45

"தரமான பொருட்கள் குறித்த நேரத்தில் சரியான விலையில் உங்கள் இல்லத்திற்கே கொண்டு வருகிறோம்.

உரிமை : முத்து மளிகை

 

3. சிறு வணிகர் ஒருவரிடம் நேர்காணல் செய்க.

.கா: சந்தைப் பொருள்கள் மீதமானால் என்ன செய்வீர்கள்?

விடை:

இடம் : கடை வீதி

சிறுவணிகர் : நாகராஜன். கா.

நேர்காண்பவர் : அமிழ்தன்

அமிழ் : ஐயா! தங்கள் பெயர் என்ன?

வணிகர் : என் பெயர் நாகராஜன்.

அமிழ் : எத்தனை ஆண்டுகளாக இந்த இடத்தில் வணிகம் செய்கிறீர்கள்?

வணிகர் : பத்து ஆண்டுகள் முடிந்து போயிருச்சு.

அமிழ் : என்னென்ன பொருள்கள் வைத்து வணிகம் செய்கிறீர்கள்?

வணிகர் : தேங்காய், கீரை வகைகள், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற கறிகாய் வகைகள்.

அமிழ் ஐயா! இவையெல்லாம் உங்கள் தோட்டத்தில் விளைந்ததா?

வணிகர் : இல்லை தம்பி! எனக்குத் தோட்டம் துரவெல்லாம் கிடையாது. பக்கத்து கிராமத்துக்குக் காலையிலேயே போயி, தோட்டக்காரங்ககிட்ட நேரடியா வாங்கிட்டு வருவேன் ........

அமிழ் : உங்களுக்குப் போதுமான வருமானம் வருதா ஐயா?

வணிகர் : எங்க தம்பி, போட்ட காச எடுத்தாலே போதும் .... சில நாள் அது கூட கிடைக்காது.

அமிழ் : ஏன் ஐயா! சந்தை, தினசரி சந்தை இப்படி எங்காவது போய் விற்கலாம் அல்லவா!

வணிகர் : அங்கெல்லாம் பெரிய, பெரிய வணிகருங்க இருப்பாங்க. கடை வாடகைக்குப் பிடிக்கணும் வரி குடுக்கணும் அதெல்லாம் கட்டுப்படியாகாது அப்பா.....

அமிழ் : ஐயா! இந்தக் காய்கறி, கீரை எல்லாம் மிஞ்சிப்போனா என்ன பண்ணுவீங்க?

வணிகர் : சாயுங்காலம் வரை பாத்துட்டு விலையைக் கொஞ்சம் குறைச்சுக் குடுப்பேன். இல்லன்னா தெரிஞ்ச ஹோட்டல் கடைகள். வேற மளிகைக் கடையில் கொடுத்துருவேன் தம்பி .......

அமிழ் : சரி ஐயா! கேட்ட கேள்விக்கு எல்லாம் பொறுமையாய்ப் பதில் சொன்னீங்க. உங்க வணிகம் வளர வாழ்த்துகள் ஐயா

நன்றி!

 

4. “கடன் அன்பை முறிக்கும்இது போன்ற சொற்றொடர்களைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், சந்தைகளில் பார்த்து எழுதுக.

விடை:

. கடன் அன்பை முறிக்கும்.

. கடன் கிடையாது.

. கடன் நட்புக்குப் பகை.

. கடன் படாதே கலங்கி நில்லாதே.

. கடன் கேட்காதீர்.

. உனக்குக் கடன் தந்தால் என் கடன் அடைக்க இயலாது.

. கடனாளி ஆகாதே. என்னையும் கடனாளி ஆக்காதே.

 

 கற்கண்டு

இயல் ஏழு

ஆகுபெயர்


பாடநூல் வினாக்கள்

சிறுவினா

1. தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக

விடை: .

அணி விளக்கம்:

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

.கா:

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம் தீப்பட்ட (து) எனவெரீஇப்புன்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

அணிப் பொருத்தம்:

சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

 

2. பண்பாகு பெயர், தொழிலாகுபெயர் - விளக்குக.

விடை:

பண்பாகு பெயர்:

'மஞ்சள் பூசினாள்'

'மஞ்சள்' என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது.

தொழிலாகுபெயர்:

வற்றல் தின்றான்'

'வற்றல்' என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.

 

கற்பவை கற்றபின் 


1) ஆகுபெயரைக் கண்டறிக.

) தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள். தொழிலாகு பெயர்

தமிழரசி வள்ளுவரைப் படித்தாள். கருத்தாவாகு பெயர்

 

) மாமாவின் வருகைக்கு வீடே மகிழ்கிறது. இடவாகு பெயர்

நாடும் வீடும் நமதிரு கண்கள். சினையாகு பெயர்

 

) கலைச்செல்வி பச்சை நிற ஆடையை உடுத்தினாள். தொழிலாகு பெயர்

கலைச்செல்வி பச்சை உடுத்தினாள். பொருளாகு பெயர் (முதலாகு பெயர்)


) நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. எண்ணலளவையாகு பெயர்

நாலடி நானூறும் இரண்டடித் திருக்குறளும் வாழ்வுக்கு உறுதி தரும். காரியவாகுபெயர்


) ஞாயிற்றை உலகம் சுற்றி வருகிறது. தொழிலாகுபெயர்

நீங்கள் கூறுவதை உலகம் ஏற்குமா. இடவாகுபெயர்

 

2. ஆகுபெயர் அமையுமாறு தொடர்களை மாற்றி எழுதுக.

) மதுரை மக்கள் இரவிலும் வணிகம் செய்கின்றனர்.

விடை:

மதுரையில் இரவு வணிகம் உண்டு.

 

) இந்திய வீரர்கள் எளிதில் வென்றனர்.

விடை:

இந்தியா எளிதாக வென்றது.

 

) நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கத்தில் உள்ளவர்கள் சிரித்தனர்.

விடை:

நகைச்சுவை நிகழ்வைப் பார்த்து அரங்கமே சிரித்தது.

 

) நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்க முடியாது.

விடை:

நீரின்றி உலகு இயங்காது.

 

சிந்தனை வினா

1. தற்காலப் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் ஆகுபெயரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் தருக.

விடை :

தற்காலத்தில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் ஆகுபெயர் பயன்படுத்துகிறோம்.

சான்றுகள் :

. சிவசங்கரியைப் படித்தேன் - என்னும் பொழுது சிவசங்கரி எழுதிய கதையைப் படித்தேன் என்று பொருள்பட, சிவசங்கரி - என்பது அவர் எழுதிய நூலுக்கு ஆகி வந்தது.

. ஐந்து மீட்டர் கொடு - துணிக்கடைக்குச் செல்லும் பொழுது, "ஐந்து மீட்டர் என்பது - நாம் தேர்ந்தெடுத்த துணிக்கு ஆகி - நீட்டலளவை ஆகுபெயராய் பயன்படுத்துகிறோம்.

. மஞ்சள் பூசினேன் - என்று கூறும் பொழுதுமஞ்சள் வண்ணத்தில் உள்ள கிழங்கை அரைத்துப் பூசினேன்என்று விளக்காமல், “மஞ்சள் பூசினேன்என்கிறோம். இஃது மஞ்சள் வண்ண கிழங்கைக் குறிக்கும் பண்பாகு பெயராகும்.

 

2. பட்டப்பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா? எடுத்துக்காட்டுகளுடன் விளக்கு.

விடை :

 பட்டப்பெயர்கள் ஆகு பெயராகும்.

சான்று :

. வாயாடி வந்தாள் - இதில் குறிப்பிட்ட பெண்ணின் பெயரைச் சொல்லிக் கூறாமல், அவள் ஓயாது பேசும் இயல்பை பெயராக்கிவாயாடிஎன்று பட்டப்பெயருடன் கூறுகிறோம். "பேசுதல்” (வாயாடுதல்) என்னும் காரியத்திற்கு ஆகி வருகிறதல்லவா.

. கலாரசிகன் வந்துவிட்டான் - இத்தொடரில்கலா ரசிகன்" என்னும் பட்டப்பெயர் அவன் கலைகளை விரும்பிப் பார்க்கும் கேட்கும் செயல்களுக்கு ஆகி வருவதால், பட்டப்பெயர்களும் ஆகு பெயர் ஆகும்.

Tags : Chapter 7 | 9th Tamil இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea : Questions and Answers Chapter 7 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : வாழிய நிலனே